(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, February 19, 2017

ராமநாதபுரத்தில் பஸ் மீது கல்வீசி தாக்கிய தி.மு.க.வினர் கைது!!

No comments :
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டதை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்டு பஸ் மீது கல்வீசி தாக்கிய தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

தமிழக சட்டசபையில் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தாக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரத்தில் உயர் நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் சுப.தங்கவேலன், மாவட்ட செயலாளர் சுப.த.திவாகரன் தலைமையில் அக்கட்சியினர் புதிய பஸ் நிலையம் பகுதியில் திடீரென்று பஸ் மறியலில் ஈடுபட்டனர்.



இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் அகமதுதம்பி, நகர் செயலாளர் கார்மேகம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பாரகு, மாணவரணி அமைப்பாளர் துரைச்சாமி, முன்னாள் கவுன்சிலர் அய்யனார், இலக்கிய அணி கிருபானந்தம், பசூல்சாதிக், மணிமுத்தரசி கோவிந்தராஜ், மாணவரணி துணை அமைப்பாளர் கூரிதாஸ் உள்பட ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினரை கைது செய்தனர்.

ராமேசுவரத்தில் நகர் தி.மு.க. செயலாளர் நாசர்கான் தலைமையில் ஏராளமானோர் திட்டக்குடி சந்திப்பில் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் மீது கல்வீசி தாக்கியதில் முன்புற கண்ணாடி உடைந்தது. பயணிகளுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று சாலைமறியல் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

இதேபோல, கமுதி பஸ் நிலையம் பகுதியில் தெற்கு ஒன்றிய செயலாளர் செந்தூர்பாண்டியன் தலைமையில் பஸ் மறியலில் ஈடுபட்டனர். சாயல்குடியில் ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் தலைமையில் பஸ் மறியலில் ஈடுபட்ட 16 பேரை போலீசார் கைது செய்தனர். பரமக்குடியில் ஐந்து முனை பகுதியில் நகர் செயலாளர் சேதுகருணாநிதி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 37 பேர் கைது செய்யப்பட்டனர். பெருநாழி விளாத்திகுளம் விலக்கு ரோட்டில் மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் மனோகரன் தலைமையில் பஸ் மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருவாடானை ஓரியூர் விலக்கு ரோட்டில் ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 41 பேர் கைது செய்யப்பட்டனர். ஆர்.எஸ்.மங்கலம் பஸ் நிலையம் அருகே ஒன்றிய செயலாளர் மதிவாணன் தலைமையில் பஸ் மறியலில் ஈடுபட்ட 40 பேர் கைது செய்யப்பட்டனர். முதுகுளத்தூர் பஸ் நிலையம் முன்பு மேற்கு ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைதுசெய்தனர். தேரிருவேலி கிராமத்தில் மறியலில் ஈடுபட்ட கிழக்கு ஒன்றிய செயலாளர் பூபதி மணி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலாடி தேவர் சிலை அருகே தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜசேகர் தலைமையில் முன்னாள் அமைச்சர் சந்தியமூர்த்தி, முன்னாள் ஊராட்சி தலைவர் அரண்மனை சாமி, வக்கீல் அசன் உள்ளிட்ட தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று 31 பேரை கைது செய்தனர்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment